பிரபல வீரரும் கர்நாடக அணியின் கேப்டனுமான 32 வயது மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக அகர்தலாவில் இருந்து தில்லி வழியாகச் சூரத்திற்குப் பயணம் செய்தபோது மயங்க் அகர்வாலுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது குடிநீர் இருப்பதாக நம்பி பாட்டிலில் இருந்ததைக் குடித்த பிறகு அகர்வாலுக்கு வயிற்று வலி மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்திலேயே அவர் வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் பயணம் செய்த விமானம், அகர்தலாவுக்கே திரும்பியது. விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட அகர்வால், அகர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகர்வால் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது உடல்நிலை குறித்த முழு விவரம் இன்னும் அறியப்படவில்லை. அகர்வால் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் வெள்ளியன்று தொடங்கும் ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அகர்வால் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் இரு சதங்களும் ஒரு அரை சதமும் எடுத்து நன்கு விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.