சில மாதங்களுக்கு முன்பே சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து செய்துகொண்டதாக சானியா மிர்சாவின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும், பாகிஸ்தான் நடிகை சனாவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதற்குச் சம்மந்தப்பட்ட புகைப்படங்களை சோயிப் மாலிக் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ல் திருமணம் செய்து கொண்டனர்.
மாலிக்கின் திருமணத்திற்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது தான். இதில் உங்களுக்கு எது கடினமானது என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்” எனப் பதிவிட்டார். இந்நிலையில் சானியா மிர்சாவும், சோயிப் மாலிக்கும் பிரிந்ததாக சில தகவல்கள் வெளியாயின.
இதைத் தொடர்ந்து சானியா மிர்சாவின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியாதாவது, “சானியா தனது தனிப்பட்ட வாழ்கையை எப்போதும் பொது பார்வையில் இருந்து தள்ளியே வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பே சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் விவாகரத்து செய்துகொண்டனர். சோயிப் மாலிக்கின் புதிய பயணத்திற்கு சானியா வாழ்த்துகள் தெரிவித்தார். சானியாவின் இந்த முக்கியமான காலகட்டத்தில் அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.