ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அயோத்தி புறப்பட்டுச் சென்றார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நாளை (ஜன. 22) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு ஏராளமான பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அயோத்தி செல்வதற்கு முன்பு சென்னையில் பேட்டியளித்த ரஜினிகாந்த், "அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். கும்பாபிஷேகம் நடைபெறுவதில் மகிழ்ச்சி. 500 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான ஒரு நாள்" என்றார் அவர்.
கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி 22 அன்று ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.