நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடிய ரிஸ்வான் 4 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். நடுவரிசை பேட்டர்கள் யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. ரிஸ்வானுடன் கூட்டணி அமைத்த ஃபகார் ஸமான் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி, ஹென்றி, இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் (22 ரன்கள்), பிளிப்ஸ் 26 (ரன்கள்) தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. இதனால் 17.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து அணி. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி தரப்பில் இஃப்திகார் அஹமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 5-வது டி20 ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. இஃப்திகார் அஹமது ஆட்ட நாயகனாகவும், ஃபின் ஆலன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். முதல் 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.