இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரிலிருந்து ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஜன.25 அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் முறையாக இந்திய மண்ணில் விளையாட இருந்த ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். 5 டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இது பெரிய பின்னடைவாக அமையும். அவருக்குப் பதிலாக மாற்று வீரராக லாரென்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹாரி புரூக் விலகியது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியதாவது: "இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திலிருந்து விலகி, தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக நாடு திரும்ப உள்ளார். அவர் இந்தியா திரும்பமாட்டார். அவரது குடும்பத்தினர் இந்த நேரத்தில் தனியுரிமையை எதிர்பார்க்கின்றனர். எனவே ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றது.