'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை ஓடிடியில் பார்த்துப் பாராட்டுவதால் எந்தப் பலனும் இல்லை என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் போன்றோர் நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன படம் திரையரங்கில் வெளியாகி, பிறகு சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது.
இந்நிலையில் ஓடிடியில் படம் பார்த்து கிடைக்கும் பாராட்டுகள் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான், ஓடிடியில் எழுதியுள்ளதாவது:
'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் இப்பொழுது தான் பலரும் அதிக அளவில் 'அமேசான் பிரைமில்' பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
நாள்தோறும் நான் எதிர்பார்க்காத நபர்கள் எல்லாம் கைப்பேசியில் அழைத்து படம் மிகவும் சிறப்பான படம் என பாராட்டுகின்றனர். இப்படிப்பட்ட பாராட்டுகளால் படத்தின் இயக்குநர் எனும் முறையில் எனக்கு எந்தப் பலனும் இல்லை! படம் வெளியான உடன் திரையரங்கில் இது போன்ற படங்களை பார்த்தால் மட்டுமே என்னால் இனிமேல் இப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் வாய்ப்புகள் கிட்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.