தமிழர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கேட்டார் நடிகை தன்யா!

நான் இதைச் செய்யவில்லை என்பதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு...
தமிழர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கேட்டார் நடிகை தன்யா!

தமிழர்களை மட்டம் தட்டிப் பேசியதாக எழுந்த சர்ச்சையில், தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நடிகை தன்யா பாலகிருஷ்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணா நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் பிப்ரவரி 9 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி நடைபெற்ற சமயத்தில், சமூகவலைத்தளங்களில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு எதிராக எழுதியதாக சர்ச்சை உருவானது. இதையடுத்து, நான் ஒப்புக்கொண்ட படங்களில் இருந்து விலகுகிறேன். மீண்டும் திரும்ப வரமாட்டேன் என அவர் அறிக்கை வெளியிட்டார்.

அதற்குப் பிறகும் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்தார் தன்யா. இந்நிலையில் லால் சலாம் படம் வெளியாகும் சமயத்தில் இந்தச் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. பாகுபலி பட வெளியீட்டின்போது எழுந்த சர்ச்சையில் கன்னட மக்களிடம் நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கோரினார். அதுபோல, கர்நாடகத்தைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன், தமிழர்களை இழிவுபடுத்தியதற்காகத் தற்போது மன்னிப்பு கோரவேண்டும் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. அதில் அவர் கூறியதாவது:

நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்...

கடந்த சில நாட்களாகச் சமூகவலைதளங்களில் தமிழர்களை இழிவுப்படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்தபோதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்தப் பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில்தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்பக் காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்தவிதச் சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்தச் சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ்த் திரைப்படங்களிலும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.

சர்சைக்குரிய இந்தக் கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களைக் காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் இதைச் செய்யவில்லை என்பதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு...

அன்புடன்,

தன்யா பாலகிருஷ்ணா

என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in