மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் தியாகராய நகரிலுள்ள இளையராஜாவின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கையில் நேற்று காலமானார். இதைத் தொடர்ந்து, விமானம் மூலம் அவரது உடல் இன்று சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. யுவன்ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு ஆகியோரும் மாலை சென்னை வந்தார்கள். தியாகராய நகரிலுள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணியின் உடல் இன்றிரவு தேனிக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், இளையராஜா தேனிக்குப் புறப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பவதாரிணியின் மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு இரங்கலைத் தெரிவித்ததாகக் கூறினார்.
தியாகராய நகரிலுள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் வருகை தருகிறார்கள்.