அன்னபூரணி சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா

ஜெய் ஸ்ரீ ராம் என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
‘அன்னபூரணி’
‘அன்னபூரணி’ @NayantharaU

அன்னபூரணி படத்தில் இடம்பெற்ற காட்சிகள் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக நடிகை நயன்தாரா தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வந்தது. டிசம்பர் 29-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு, இந்தப் படம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றதற்கு மன்னிப்புக் கோரிய தயாரிப்பு நிறுவனம், சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை அன்னபூரணி படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது. ஓடிடி தளத்திலிருந்து படம் நீக்கப்பட்டதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா அன்னபூரணி படத்தின் சர்ச்சை குறித்து மௌனம் கலைத்துள்ளார்.

ஜெய் ஸ்ரீ ராம் என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையில் நயன்தாரா கூறியுள்ளதாவது:

"எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in