பிறந்தநாள்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி?

எந்தவொரு பின்புலமும் இன்றி தமிழ்த் திரையுலகினுள் நுழைந்து நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து...
பிறந்தநாள்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி?

இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்த நாள்.

கமல், விக்ரம், சூர்யா, தனுஷ் வரிசையில் நடிப்புக்குச் சவாலாக விளங்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தென்மேற்குப் பருவக்காற்று படத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து வருகிறார். இன்று, பாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையையே ஒரு படமாகவே எடுக்கலாம்.

ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் விஜய் சேதுபதி. 5-ம் வகுப்பு வரை அங்குதான் படித்தார். பிறகு சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டார். ஆரம்பத்தில் சினிமா மீது ஆர்வம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார். டி.பி. ஜெயின் கல்லூரியில் படித்தார். கல்லூரிக் காலங்களிலும் நண்பர்களுடன் இணைந்து படங்கள் பார்த்ததில்லை. எனினும் கல்லூரிக் காலங்களில் சில நண்பர்கள் சினிமா ஆசையைத் தூண்டியிருக்கிறார்கள். உன் முகம் நன்றாக உள்ளது என்கிற அவர்களுடைய பாராட்டில் மயங்கியுள்ளார். குடும்பத்துக்காக துபாய்க்குச் சென்று வேலை பார்த்தார். அங்கு ஜெஸ்ஸியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

துபாயில் வேலைக்குச் சென்றபோது அவருடைய அண்ணன், விஜய் சேதுபதியை வைத்து நிறைய புகைப்படங்கள் எடுத்து, உன் முகம் போட்டோஜெனிக்காக உள்ளது என்று அடுத்த ஆசை விதையைத் தூவியிருக்கிறார். இந்தியாவுக்குத் திரும்பினார். கடனில் தவித்தபோது சினிமாவில் நடிக்கலாம் என முடிவு செய்தார் விஜய் சேதுபதி. கூத்துப்பட்டறையில் கணக்காளராகப் பணியாற்றினார். நடிப்புக்கலையை அருகில் இருந்து பார்த்ததில் அதன் சூட்சமம் புரிந்தது. நடிகராகும் ஆசை மேலும் அதிகமானது.

விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோதே திருமணம் செய்துகொண்டார். இண்டீரியர் டெகரேஷன் தொடர்பான வேலைகளுக்கு முயற்சி செய்து பார்த்தார். ஆனாலும் சினிமா மீதான ஆசையில் வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடினார். அப்போது கர்ப்பமாக இருந்த விஜய் சேதுபதியின் மனைவிக்கு இது பிடிக்கவில்லை. வாய்ப்பு தேடக் கூடாது என்று சத்தியம் வாங்கியுள்ளார். அன்பு இருக்கும் இடத்தில் பொய் சத்தியம் எதுவும் செய்யாது என்று எண்ணி தொடர்ந்து வாய்ப்புகளை விடாமல் தேடியுள்ளார்.

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவான விண்ட் குறும்படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. குறும்படங்களில் நடித்ததால் மணிகண்டன், கார்த்திக் சுப்புராஜ் எனப் பலரும் பழக்கமாகி பிறகு பிற்காலத்தில் அவர்களுடைய இயக்கத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. தொலைக்காட்சித் தொடரிலும் சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்தார்.

ஒரு நல்ல வாய்ப்பை அளித்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. 2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் விஜய் சேதுபதி. இந்தப் படம் தமிழ்த் திரையுலகுக்கு ஒரு நல்ல கதாநாயகனையும் இயக்குநரையும் அளித்தது.

கதாநாயகனாக நடித்த பிறகும் சுந்தரபாண்டியன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2012-ல் வெளியான பீட்சா படம் விஜய் சேதுபதிக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் பிரசாந்த், வைபவ் போன்றோர் நடிக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாக விஜய் சேதுபதியைத் தேடி வந்தது பீட்சா வாய்ப்பு. பீட்சா படத்தை தமிழக ரசிகர்கள் அமோகமாக வரவேற்றார்கள். இதனால் விஜய் சேதுபதிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

அடுத்த மூன்று படங்களும் அட்டகாசம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

மூன்றும் விதவிதமான கதாபாத்திரங்கள். ஒரு படத்தில் சாதுவாக, எல்லாம் மறந்தவராகவும் அடுத்த இரு படங்களிலும் ரெளடியாக நடித்தாலும் அதிலும் வித்தியாசம் காண்பித்தார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி விஜய் சேதுபதியின் திறமையை வெளிப்படுத்தின. மூன்றுமே பெரிய வெற்றியைப் பெற்றதால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரானார் விஜய் சேதுபதி.

அடுத்து வெளியான ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சூது கவ்வும் போல ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்தவருக்கு அழகாக அமைந்தது நானும் ரெளடி தான். 2015 அக்டோபரில் வெளியான இந்தப் படம் அட்டகாசமான வெற்றியை அடைந்து, விஜய் சேதுபதியை மறுபடியும் உயரத்தில் நிறுத்தியது. விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்ஜே பாலாஜி என நான்கு பெருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை அளித்த படம் இது. அடுத்து வெளிவந்த சேதுபதி, நல்ல வெற்றியை அடைந்தது.

காதலும் கடந்து போகும், இறைவி படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தன. விமர்சன ரீதியில் இரு படங்களும் கவனம் பெற்றன. அடுத்து மீண்டும் இரு அருமையான படங்கள் விஜய் சேதுபதிக்கு அமைந்தன. தர்மதுரை, ஆண்டவன் கட்டளை. மசாலா இல்லாமல் நல்ல கதையுடன் படங்கள் எடுக்கப் பிரியப்படும் சீனு ராமசாமியும் மணிகண்டனும் விஜய் சேதுபதிக்கு அருமையான கதாபாத்திரங்களை வழங்கினார்கள். இந்த இரு படங்களும் விஜய் சேதுபதியின் நடிப்புத்திறமையை நன்கு வெளிப்படுத்தின.

அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவண் மற்றும் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா என இரு வெற்றிப் படங்கள் அமைந்தன. வித்தியாசமான திரைக்கதை மற்றும் விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பால் விக்ரம் வேதா பெரிய வெற்றியை அடைந்தது. இதன்பிறகு மீண்டும் சில படங்கள் அவருக்குச் சரியாக அமையவில்லை.

மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. காவலர் வேடத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தார். அடுத்ததாக 96.

தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்து ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தது. விஜய் சேதுபதியின் நடிப்புத் திறமைக்குச் சவாலாக அமைந்தது ராம் கதாபாத்திரம். முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் விஜய் சேதுபதி.

இதன்பிறகு பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் வித்தியாசமான முறையில் தன்னுடைய திரை வாழ்க்கையை அணுகி வருகிறார் விஜய் சேதுபதி. பேட்ட படத்தில் ரஜினியுடனும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடனும் விக்ரம் படத்தில் கமலுடனும் நடித்தது இவருடைய வித்தியாசமான அணுகுமுறையை நன்கு வெளிப்படுத்தியது. நல்ல கதாபாத்திரம் எந்தப் படத்தில், எந்த மொழியில் கிடைத்தாலும் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளார் விஜய் சேதுபதி. அதனால் தான் ஹிந்தி வரை தற்போது முன்னேறியுள்ளார்.

2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் விஜய் சேதுபதி. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை யாரால் மறக்க முடியும்? காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம், விஜய் சேதுபதியின் நடிப்புத் திறமையை இன்னொருமுறை நிரூபித்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை படமும் அவருக்குப் பெருமை சேர்த்தது. அனைவரும் அதன் 2-வது பாகத்தை எதிர்பார்த்து வருகிறார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்த ஜவான் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லன். இந்தப் படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் பொங்கலுக்கு ஹிந்தி, தமிழில் மெரி கிறிஸ்துமஸ்து வெளியாகியுள்ளது.

எந்தவொரு பின்புலமும் இன்றி தமிழ்த் திரையுலகினுள் நுழைந்து நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து இந்திய அளவில் முன்னணி நடிகராக உள்ளார் விஜய் சேதுபதி. நடிக்க வந்த முதல் பத்து வருடங்களிலேயே நிறைய சாதித்து விட்டார். இன்னும் அவர் சாதித்து, எட்டும் உயரங்களுக்கு அளவே இல்லை என்பது மட்டும் நிஜம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in