அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளிவந்த கேப்டன் மில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் விவாதப்பொருளாக உள்ளது. இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பற்றி தனுஷ் பேசக்கூடிய வசனங்களும் காட்சியும் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
“எது சரி. நீ சுதந்திரத்துக்கு போராடுறியா?. யார் சுதந்திரத்துக்கு?. வெள்ளகாரன் கைல இருந்து நாட்டைக் காப்பாத்தி நம்மளை ஆள்ற ராஜாக்கள்ட்ட குடுக்கப் போறியா?. அவனுங்க நம்ம பாட்டன், முப்பாட்டன் கட்டுன கோயிலுக்குள்ள நம்மளயே வரகூடாதுனு சொல்றான், நீ அவனுங்களுக்காக போராடுற. என்ன மாறுச்சு? இங்க எதுவும் மாறல. நம்ம சனத்த கருவறைல விடுவானுங்களா? இவன் என்ன காலுல செருப்பு போட கூடாதுனு சொல்றான். வெள்ளக்காரன் எனக்கு கால்ல போட பூட்ஸ குடுக்குறான். இவன் என்ன கூனிக் குறுகி நிக்கனும்னு சொல்றான் அவன் என்ன சரிக்கு சமமா உக்கார வச்சு சாப்பிடுன்னு சொல்றான், இவன் என்ன மிதிக்கிறான் அவன் எனக்கு மரியாதை குடுக்குறான், அந்த மரியாதை தான் எனக்கான சுதந்திரம். நீ எதுக்காக போராடுறியோ, யாருக்காக போராடுறியோ போராடு, நா போறேன். வெள்ளக்காரன் வரதுக்கு முன்னாடி நம்ம சுதந்திரமா தான் இருந்தோமா? இதுக்கு முன்னாடி அவுனுங்க நம்மள ஆண்டுட்டு இருந்தானுங்க, இப்போ இவுனுங்க நம்மள ஆண்டுட்டு இருக்கானுங்க. அவுனுங்கிட்ட அடிமையா இருந்தோம். இப்போ இவுனுங்க கிட்ட அடிமையா இருக்கோம். யார்ட்ட அடிமையா இருந்த என்ன?” என பேசும் வசனம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தை உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இப்படம் குறித்து தன்னுடைய X தளத்தில் அவர் கூறியதாவது: “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்றார்.