மகளிர் ஆசியக் கோப்பையில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை படைத்தார் சமாரி அட்டபட்டு.
மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி ஜூலை 19 அன்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இன்று நடைபெற்ற இலங்கை - மலேசியா ஆட்டத்தில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையைச் சேர்ந்த சமாரி அட்டபட்டு 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதன் மூலம் மகளிர் ஆசியக் கோப்பையில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனையை படைத்தார் சமாரி அட்டபட்டு.
மேலும், சர்வதேச டி20 ஆட்டங்களில் இலங்கை அணிக்காக எடுக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையையும் படைத்தார். முன்னதாக 113 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த அட்டபட்டு தனது சாதனையைத் தானே முறியடித்தார்.
இந்த ஆட்டத்தில் மலேசியா அணி 40 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.