கிழக்கு நியூஸ்
ரேகா குப்தா 1993-ல் ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இணைந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் இருந்துள்ளார்.
2007-ல் தேர்தல் அரசியலில் களமிறங்கிய ரேகா குப்தா, வடக்கு பிதம்புராவிலிருந்து இருமுறை கவுன்சிலராக தேர்வானார். தெற்கு தில்லி மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளார்.
ஷாலிமார் பாக் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த ரேகா குப்தா, 2025-ல் அதே தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வானார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது பாஜக.
பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ரேகா குப்தா ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில் தில்லி முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித், ஆதிஷி வரிசையில் ரேகா குப்தா தில்லியின் நான்காவது பெண் முதல்வராகியுள்ளார்.