ஹார்முஸ் நீரிணையைக் கடந்த 2 இந்திய கப்பல்கள்: வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்  
உலகம்

ஹார்முஸ் நீரிணையைக் கடந்த 2 இந்திய கப்பல்கள்: வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் | Strait of Hormuz | Iran |

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஏற்கெனவே நல்லுறவு உள்ளது. பரிமாற்றம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை....

கிழக்கு நியூஸ்

ஈரானுடனான பேச்சுவார்த்தை நல்ல பலனை அளித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மேலும் தொடர்கின்றன என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பகுதியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு

இதனால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகத்தைக் குறைத்துள்ள மத்திய அரசு, வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியை அதிகப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், கடந்த மார்ச் 12 அன்று ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கொடியுடன் கூடிய வணிக கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளித்தது. அதன்பேரில் ஒரு கப்பல் அன்று ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்தடைந்தது.

இரண்டு கப்பல்கள் இந்தியா வருகை

இதேபோல்,கடந்த இரு நாள்களில் இந்திய கொடியுடன் ஷிவாலிக், நந்தா தேவி என்ற இரு எண்ணெய்க் கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 92,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை இரண்டும் விரைவில் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களுக்கு விரைவில் வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், ஈரானுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தை நல்ல பலன்களை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர் கூறியதாவது:-

“இந்தியாவின் கண்ணோட்டத்தில், நாம் பகுத்தறிவுடன் செயல்பட்டு, ஒருங்கிணைந்து, ஒரு தீர்வைப் பெறுவது நல்லது. இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு ஈரான் எந்தவிதமான பிரத்யேக வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. ஒவ்வொரு கப்பலின் இயக்கமும் தனிப்பட்டதாகவே நடக்கிறது. ஈரான் எதையும் பரிமாற்றமாகப் பெறவில்லை. தில்லிக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் வரலாற்று ரீதியான பரிமாற்றங்களைக் கொண்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

பேச்சுவார்த்தை தொடரும்

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஏற்கெனவே நல்லுறவு உள்ளது. பரிமாற்றம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான மோதல். இது ஆரம்பகட்டம் தான். இன்னும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வர வேண்டிய கப்பல்கள் நிறைய உள்ளன. தற்போது நடந்திருப்பது வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதற்கான பணிகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது” என்றார்.

Talks have yielded "some results", and this is an "ongoing" process, External Affairs Minister Dr S Jaishankar has said after Iran allowed two Indian-flagged gas tankers to pass through the Strait of Hormuz, which Tehran has blocked amid its war with the US and Israel.