உலகம்

நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலை சம்பவங்கள்: பாகிஸ்தானில் பயங்கரம்

ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்களை சம்மந்தப்பட்ட குடும்பங்கள் புதைத்துவிட்டு, அப்பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் காரணம் கூறுவது வாடிக்கையானது.

ராம் அப்பண்ணசாமி

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை ஏறத்தாழ 101 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆணவக்கொலை போன்ற குற்றச்செயல்களை எதிர்த்துப் பல வழிகளிலும் போராடி வருகிறது `சிந்து சுஹாய் அமைப்பு’.

இந்த அமைப்பு நேற்று (அக்.11) வெளியிட்ட அறிக்கையின்படி சிந்து மாகாணத்தின் ஜகோபாபாத், காஷ்மோரே, சுக்கூர், கையிர்பூர், கோட்கி, லர்கானா ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்தமாக நடப்பாண்டின் ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும் சுமார் 101 ஆணவக்கொலை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

ஆனால் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆணவக்கொலை சம்பவங்கள் பெருமளவு பதிவாகவில்லை எனவும், இதனால் ஆணவக்கொலைகளால் நிகழ்த்தப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது இந்த அமைப்பு.

இத்தகைய ஆணவக்கொலை சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வந்தபிறகும்கூட, சம்மந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கொலைக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது சிந்து சுஹாய் அமைப்பு.

சில சந்தர்ப்பங்களில் மட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் சிந்து மாகாணத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளன. அதிலும் ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்களை சம்மந்தப்பட்ட குடும்பங்களே புதைத்துவிட்டு, அந்தப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது வாடிக்கையானது என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.