உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கிய ஈரான் ANI
உலகம்

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கிய ஈரான்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? | Qatar | Iran |

தற்போது இந்தியாவின் தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டராக உள்ளது....

கிழக்கு நியூஸ்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையான ராஸ் லஃபான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஈரானின் உயர் ராணுவ தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டார்.

வளைகுடா நாடுகளைத் தாக்கும் ஈரான்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது மட்டுமன்றி தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன்கள் உள்ளிட்டவற்றை ஏவி தாக்கி வருகிறது. மறுபுறம் ஈரானை இஸ்ரேல் - அமெரிக்கப் படைகளும் தாக்கி வருகின்றன. குறிப்பாக கத்தார், பஹ்ரைன், துபாய் ஆகிய நாடுகளின் மீது ஈரான் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை மீது ஈரான் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளது.

முன்னணி எரிவாயு உற்பத்தியாளர்

கத்தார் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து உலகின் முன்னணி எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆலை, உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மையம். இந்த தாக்குதலின் விளைவாக அங்கு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துலக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு உண்டா?

இந்த நிலைமை இந்தியா போன்ற நாடுகளை கடுமையாக பாதிக்கிறது. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 50% ஐ சர்வதேச சந்தையிலிருந்து பெறுகிறது. குறிப்பாக, இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 20% கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது கத்தார் எரிவாயு உற்பத்தியை நிறுத்தியிருப்பதால், இந்தியா எரிவாயு நுகர்வைக் குறைக்கும் நிலை ஏற்படலாம். குறிப்பாக தொழில்துறை மற்றும் மின்சார துறையில் எரிவாயு பயன்பாடு அதிரடியாக குறைக்கப்பட நேரும் என்று கூறப்படுகிறது.

புதிய ஆதாரங்களிலிருந்து எரிவாயு இறக்குமதி?

தற்போது இந்தியாவின் தினசரி இயற்கை எரிவாயு நுகர்வு 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டராக உள்ளது. இதில் 97.5 மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை போர் சூழல் காரணமாக 47.4 மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர் அளவு எரிவாயு இறக்குமதி விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அரசு நிறுவன எரிவாயு நிறுவனங்கள் மாற்று புதிய ஆதாரங்களிலிருந்து எரிவாயு சரக்குகளைப் பெற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Iran has attacked the world's largest gas plant, Ras Laffan, in Qatar, causing production to be completely halted.