பிரதமர் மோடி (கோப்புப்படம்) ANI
உலகம்

தூதரக முயற்சிகளே உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்கான வழி: பிரதமர் மோடி அறிவுரை | PM Modi |

ரஷ்ய அதிபரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு பிரதமர் மோடி கவலை...

கிழக்கு நியூஸ்

ரஷ்ய அதிபரின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், புடின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள டிரோன் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

பிரதமர் மோடி கவலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘‘ரஷ்ய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் அவற்றை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

ஜெலன்ஸ்கி மறுப்பு

ரஷ்யா வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

“அமெரிக்க அதிபர் டிரம்பின் குழுவுடன் இணைந்து ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எங்கள் முயற்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் ரஷ்யா இத்தகைய ஆபத்தான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. புடினின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வெறும் புனைவுக்கதை. உக்ரைனில் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை மறைக்கவும், போர் நிறுத்தத்திற்கான முன்னெடுப்பை ரஷ்யா எடுக்கவில்லை என்ற புகாரைத் துடைப்பதற்காகவும் இத்தகைய முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதெல்லாம் வழக்கமான ரஷ்ய பொய்கள். கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் உட்பட பல இடங்களில் ரஷ்யா ஏற்கெனவே தாக்குதல் நடத்தியுள்ளது. ராஜதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் உக்ரைன் இதுவரை எந்தச் செயலும் செய்ததில்லை. ஆனால் ரஷ்யா தொடர்ந்து அத்தகைய செயல்களைச் செய்து வருகிறது. இதுதான் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள வேறுபாடு. உலகம் இப்போது அமைதியாக இருக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது. நீடித்த அமைதியை நோக்கிய முக்கியமான பணியை ரஷ்யா இப்படிக் கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

Prime Minister Modi has expressed concern over reports that Ukraine attacked the Russian President's house.