பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகணாத்தின் செபு நகரில் நேற்று (செப்.30) இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. மேலும் மின் விநியோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டதால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. கட்டடங்களின் இடுபாடுகளில் மக்கள் பலர் சிக்கினர். இவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் அப்பகுதியில் விடுக்கப்பட்டுள்ளதால் மக்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கையிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில்தான் பிலிப்பைன்ஸின் செபு நகர் அருகே மையம் கொண்ட புயல் சீற்றம் காரணமாக 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான சேதம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா பிலிப்பைன்ஸுடன் நிற்கிறது.”
என்று தெரிவித்துள்ளார்.