பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசு பாலஸ்தீன மக்களைக் கைவிட்டுவிட்டது என்று விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (பிப். 25) இஸ்ரேல் செல்கிறார். ஏற்கெனவே கடந்த 2017-ல் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட மோடி, இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். அதைத் தொடர்ந்து இம்முறை மேற்கொள்ளும் அவரது பயணத்தின்போது தேசப் பாதுகாப்பு என்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு
வரலாற்றில் இதுவரை இந்தியா, பாலஸ்தீனத்தின் இறையாண்மையை ஆதரிக்கும் நாடாக இருந்து வந்துள்ளது. பல தசாப்தங்களாக இந்தியா இஸ்ரேலுடனான உறவைப் பேணி வந்தாலும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரித்தே வந்துள்ளது. இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவுடன் நல்லுறவைக் கொண்டிருக்கும் இந்தியா, பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கும் ஐநாவின் தீர்மானத்திற்கும் ஆதரவாக வாக்களித்தது.
ஈரான் தாக்குதல் திட்டம்
இதற்கிடையில், ஒருபுறம் காஸா - ஹமாஸ் படையினர் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமையில் அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டாலும், அவ்வப்போது பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. மறுபுறம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.
காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில், பிரதமரின் இஸ்ரேல் பயணத்தைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வெளியேற்றுவதும், அவர்களின் நிலங்களை அபகரிப்பதும் தீவிரமடைந்து உலகளாவிய கண்டனத்தைப் பெற்றுள்ளது. காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் எவ்வித இரக்கமுமின்றித் தொடர்கின்றன. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல்
இத்தகைய சூழலிலும், மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தனது நெருங்கிய நண்பர் நெதன்யாகுவைத் தழுவிக்கொள்ள பிரதமர் நாளை இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேலின் நீதித்துறை சுதந்திரத்தை நெதன்யாகு சீர்குலைப்பதாகக் கூறி, அங்குள்ள எதிர்க்கட்சிகள் மோடியின் நாடாளுமன்ற உரையினைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தி வருகின்றன. பாலஸ்தீன விவகாரத்தில் தனது அர்ப்பணிப்பு குறித்து மோடி அரசு இழிவான, பாசாங்குத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. உண்மை என்னவென்றால், 1988 நவம்பர் 18 அன்றே பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறந்து, மோடி அரசு அவர்களைக் கைவிட்டுவிட்டது என்பதே” என்று பதிவிட்டுள்ளார்.
Condemning Prime Minister Modi's visit to Israel, Congress leader Jairam Ramesh has criticized that the Modi government has abandoned the Palestinian people.