GLEB GARANICH
உலகம்

லெபனானில் தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

ராம் அப்பண்ணசாமி

லெபனானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து நேற்று (செப்.30) இரவு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இதைத் தொடர்ந்து லெபனானின் வரையறுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் இலக்காக வைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இன்று காலை அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். லெபனானின் தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புடன் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது இஸ்ரேல். இந்நிலையில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலையும், லெபனானையும் பிரிக்கும் எல்லைக்கோடான நீல வரிப் பகுதியில் இருக்கும் பதுங்குக்குழிகளில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செயல்படத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க தனியார் செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தரைவழித் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் நார்தர்ன் ஆரோஸ் (Operation Northern Arrows) எனப் பெயரிட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இந்தத் தரைவழி தாக்குதலைத் தொடங்கும் முன்பு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் உள்ள தாஹே பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது இஸ்ரேல். அதன்பிறகு அப்பகுதி மீது சராமாரியாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது இஸ்ரேல் ராணுவம்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குப் பிறகு காணொளி வெளியிட்ட ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நயிம் காசிம், `இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளத் தயார்’ என்று அறிவித்திருந்தார்.