அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 
உலகம்

ஈரானுடன் போர் முடிய 4 வாரங்கள் ஆகலாம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் | Iran | Israel | USA |

ஈரான் ஆயுதங்களைக் கீழே போடாமல் இருந்தால் உறுதியான மரணத்தை எதிர்கொள்ள நேரும். அது அழகாக இருக்காது...

கிழக்கு நியூஸ்

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், போர் முடிவதற்கு நான்கு வாரங்களுக்கு மேல் ஆகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரானின் பல இடங்களைத் தாக்கி வருகின்றன. ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படுகொலையுடன் தொடங்கிய இந்தப் போரில், ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்கப் படைகள் முகாம் கொண்டுள்ள வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சு

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், போரின் நிலை தொடர்பாக நேற்றிரவு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த 36 மணி நேரத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில், உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய, மிகச் சிக்கலான, மிக அதிக சக்தி வாய்ந்த ராணுவத் தாக்குதல்களில் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். இதுபோன்று யாரும் பார்த்ததில்லை. நாங்கள் ஈரான் நாட்டில் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கியுள்ளோம், அதில் அந்நாட்டின் புரட்ச்கர காவல்படையின் பகுதிகள், ஈரான் விமானப் பாதுகாப்பு அமைப்புகள் போன்றவையும் அடங்கும்.

காமெனி இறப்பைக் கொண்டாடினார்கள்

ஈரானில் 9 கப்பல்களையும் கடற்படை கட்டங்களையும் அழித்திருக்கிறோம். ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி இறந்துவிட்டார். இந்தக் கொடூரமான, வெறுக்கத்தக்க மனிதனின் கைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் ரத்தம் படிந்துள்ளது. ஈரான் முழுவதும், அவரது மரணம் அறிவிக்கப்பட்டபோது, ஈரான் மக்களின் குரல்கள் தெருக்களில் ஆரவாரத்துடனும் கொண்டாட்டத்துடனும் ஒலித்தன. முழு ராணுவத் தலைமைத்துவமும் அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களில் பலர் தங்கள் உயிரைப் பாதுகாக்க சரணடைய விரும்புகின்றனர்.

போர் முடிய 4-5 வாரங்கள் ஆகலாம்

நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் கொண்ட இறான் ஆட்சி, மத்திய கிழக்கிற்கு சகிக்க முடியாத அச்சுறுத்தலாக இருக்கும், ஆனால் அமெரிக்க மக்களுக்கும் கூட. ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் நான்கு முதல் ஐந்து வாரங்கள் எனத் திட்டமிட்டோம், ஆனால் அதை விட மிக நீண்ட காலம் செல்லும் திறன் நம்மிடம் உள்ளது. நமது நாடே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும், மேலும் அது மிக நெருக்கத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. போர் நடவடிக்கைகள் தற்போது முழு வீச்சில் தொடர்கின்றன. நமது அனைத்து இலக்குகளும் அடையப்படும் வரை தொடரும். மிக வலுவான இலக்குகள் உள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர்கள் ஏதாவது செய்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடியவில்லை.

ஆயுதங்களைக் கீழே போடுங்கள்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, இந்தக் கொடிய பயங்கரவாதிகள் "அமெரிக்காவுக்கு மரணம்" அல்லது "இஸ்ரேலுக்கு மரணம்" அல்லது இரண்டுக்கும் என்று கோஷமிட்டபடி அமெரிக்காவைத் தாக்கி வருகின்றனர். அவர்கள் உலகின் எண்.1 அரசு பயங்கரவாத ஆதரவாளர். நாம் உலகின் மிகப் பெரிய, மிக சக்திவாய்ந்த நாடு, எனவே அவர்கள் செய்வதைப் பற்றி ஏதாவது செய்ய முடியும். இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது. மீண்டும் ஒருமுறை, புரட்சிகர காவல்படை, ஈரான் ராணுவம், காவல்துறையினரை வேண்டுகிறேன்: ஆயுதங்களைக் கீழே போடுங்கள் அல்லது உறுதியான மரணத்தை எதிர்கொள்ளுங்கள். அது உறுதியான மரணமாக இருக்கும். அழகாக இருக்காது.

ஈரான் தேசபக்தர்களுக்கு அழைப்பு

சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து ஈரான் தேசபக்தர்களையும் இந்த தருணத்தைப் பயன்படுத்துமாறு அழைக்கிறேன். தைரியமாக இருங்கள், துணிச்சலாக இருங்கள், வீரமாக இருங்கள், உங்கள் நாட்டை மீட்டெடுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது. உங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். மீதி உங்களிடம் தான், ஆனால் உதவ நாங்கள் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

As the war between Israel, the US and Iran enters its fourth day, US President Donald Trump has said that it could take more than four weeks to end.