கோப்புப்படம் 
உலகம்

சார்லி கிர்கை சுட்டவர் பிடிபட்டார்: டிரம்ப் | Charlie Kirk |

அவர் தாமாக வந்து சரணடைந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

சார்லி கிர்கை சுட்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வலதுசாரி கருத்துகள் சார்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வந்தவர் சார்லி கிர்க். இவர் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர்.

பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, சார்லி கிர்க் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சார்லி கிர்கை சுட்டுக்கொன்ற நபர் குறித்து தகவல்கள் தெரிவித்தால், 1 லட்சம் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என எஃப்பிஐ அறிவித்தது.

குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவர் பிடிபட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். "சார்லி கிர்கைச் சுட்டவர் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவர் அவரைச் சரணடையச் செய்துள்ளார். மத போதனை வழங்கக்கூடியவர் தான் சரணடையச் செய்திருக்கிறார். மத போதனை வழங்கக்கூடியவருக்கு நல்ல நண்பராக இருப்பவர் சட்ட அமலாக்கத் துறையைச் சேர்ந்தவர். மேலும், குற்றவாளியின் தந்தையும் சரணடைவதற்கான பின்னணியில் இருக்கிறார்" என்றார் டிரம்ப்.

குற்றவாளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் தாமாகவே காவல் துறை தலைமையகத்துக்கு வந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், "இவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவார், மரண தண்டனை வழங்கப்படும் என்று நம்புகிறேன்" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஒருவர் நடந்து செல்லும் காணொளி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. குற்றவாளி எனச் சந்தேகிக்கப்பட்டு வந்த நபர் பேஸ்பால் தொப்பி மற்றும் கண் கண்ணாடியை அணிந்துச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது. கல்லூரி மாணவர்கள் வயதுடன் ஒத்துப்போனதால், மாணவர்களுடன் மாணவர்களாக அவர் கலந்துவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Charlie Kirk | Donald Trump | Shooter | US President |