உலகம்

30 அரசு அதிகாரிகளைத் தூக்கிலிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக வெளிவரும் ஊடகச் செய்திகள் தவறானவை. இவை உலகளவில் வட கொரியாவின் மதிப்பைக் களங்கப்படுத்தும் நடவடிக்கையாகும்

ராம் அப்பண்ணசாமி

வெள்ள பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதற்குக் காரணமான 30 அரசு அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவின் பேரில் இன்று (செப்.05) காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலையில் பெய்த கனமழையின்போது வட கொரியாவின் பல பகுதிகளில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சுமார் 4 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர், மேலும் 15 ஆயிரம் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன என்று தென் கொரிய ஊடக நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்த செய்திகளை மறுத்த கிம் ஜோங் உன், ’வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தென் கொரிய ஊடகங்கள் பரப்பும் செய்திகள் தவறானவை. இவை உலகளவில் வட கொரியாவின் மதிப்பைக் களங்கப்படுத்தும் நடவடிக்கையாகும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் உயிரிழந்ததற்குக் காரணமாகக் கருதப்பட்ட 30 அரசு அதிகாரிகள் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாகவே மக்கள் உயிரிழந்ததால் இந்த மரண தண்டனையை வட கொரிய அரசு நிறைவேற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வட கொரியாவில் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகள் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது கொரிய டைம்ஸ் செய்தி நிறுவனம். இதன்படி கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு வருடத்துக்கு சராசரியாக 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, ஆனால் தற்போது வருடத்துக்கு சராசரியாக நூறு நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.