எதிர்காலத்தில் ஃபோன் பயன்பாடு என்பதே இருக்காது என்றும் அனைத்தும் நியூராலிங்காக மாறிவிடும் என்றும் நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 28-ல் நோலண்ட் அர்பா என்பவருக்கு முதன்முதலாக நியூராலிங்கின் பிரெய்ன் சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பிரெய்ன் சிப் என்பது சிந்தனையின் மூலம் கணினி மற்றும் செல்ஃபோன் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
நோலண்ட் அர்பா என்பவருக்கு ஒரு விபத்து நேர்ந்ததிலிருந்து முடக்கவாதப் பிரச்னை உள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் இவருக்கு பிரெய்ன் சிப் பொருத்தப்பட்டது. எலான் மஸ்கின் நியூராலிங்க், இந்த மருத்துவத் தொழில்நுட்பத்தை இவருக்குப் பொருத்தியது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இவர் நன்கு குணமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இவர் நியூராலிங்கின் பிரெய்ன் சிப்பைப் பொருத்தி 100 நாள்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில், நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் எதிர்காலத்தில் ஃபோன் பயன்பாடு இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"எதிர்காலத்தில் ஃபோன் பயன்பாடு என்பது இருக்காது. வெறும் நியூராலிங்க் மட்டும்தான் பயன்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.