PRINT-132
தொழில்நுட்பம்

வாடிக்கையாளர்கள் தரவுகள் கசியவில்லை: ஏர்டெல் விளக்கம்

டார்க் வெப்பை சில பிரத்தியேக மென்பொருட்கள் வழியாக அணுக முடியும். போதை மருந்து, ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு டார்க் வெப் பயன்படுத்தப்பட்டு வருகிறது

ராம் அப்பண்ணசாமி

ஏறக்குறைய 37 கோடி வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு, டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது, என்று வெளியான குற்றச்சாட்டுக்கு ஏர்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 5-ல் ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், `ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின்றன. இது ஏர்டெல் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஏர்டெல் நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பில் எந்த மீறலும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இணையளத்தில் வெளியான சில சரி பார்க்கப்படாத அறிக்கைகளில் 37 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களின், தொலைபேசி எண்கள், இ-மெயில் ஐடிகள், ஆதார் எண்கள் போன்றவை திருடப்பட்டு ஷென்ஸென் என்ற சீன ஹேக்கரால் 50 ஆயிரம் டாலர்களுக்கு டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

டார்க் வெப் என்பது இணையதளத்தின் ஒரு பகுதியாகும். டார்க் வெப்பை சில பிரத்தியேக மென்பொருட்கள் வழியாகவே அணுக முடியும். போதை மருந்து கடத்தல், ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களுக்கு டார்க் வெப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போல 2021-ல், இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் என்பவர், ஏர்டெல் நிறுவனத்தின் 25 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை அப்போது ஏர்டெல் நிறுவனம் மறுத்தது.