கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ராம் அப்பண்ணசாமி

வரும் செப்.15 வரை சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான அனுமதியை அளித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சென்னை பெருநகர காவல்துறை.

கடந்த செப்.07-ல் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் சுமார் 1524 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கியது சென்னை பெருநகர காவல்துறை. இந்நிலையில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிட்டு இன்று செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள 1,524 விநாயகர் சிலைகளை வரும் செப்டம்பர் 15-க்குள் கரைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க, அனுமதியளித்த 17 வழித்தடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கொண்டு செல்ல வேண்டும். அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சிலை கரைப்பு நிகழ்வுகளின் பாதுகாப்புக்காக 16,500 காவல்துறையினரும், 2000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.