தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிழக்கு நியூஸ்

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதனிடையே, தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிஎம்டிஏ அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்தியக் குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சவுக்கு சங்கரை மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.