சென்னைக் கடற்கரைப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 35,000 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியது. சென்னையைப் பொறுத்தவரை 1,500 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு நேற்றும் இன்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் இன்று 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் என நான்கு இடங்களில் கரைக்கப்பட்டன. இன்று, பாதுகாப்புப் பணியில் 16,000 காவலர்கள் ஈடுபட்டார்கள்.
கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.