கோட் படத்தில் விஜய் 
தமிழ்நாடு

அரசியல் பிரவேசம்: சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவிப்பு!

முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

அரசியலுக்குள் நுழைந்துள்ள பிரபல நடிகர் விஜய், விரைவில் திரைப்படத் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு, தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு தகவலை விஜய் வெளியிட்டுள்ளார். அரசியலுக்குள் நுழைந்துள்ளதால் திரைப்படத் துறையிலிருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

அறிக்கையில் இதுகுறித்து விஜய் கூறியதாவது:

இறுதியாக, என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்துடன் முடித்துக்கொள்வாரா அல்லது அடுத்ததாக அட்லி அல்லது லோகேஷ் கனகராஜ் படத்தில் கடைசியாக நடிப்பாரா என்பது இனிமேல் தான் தெரியவரும்.