வெள்ளதுரை 
தமிழ்நாடு

‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளதுரை பணியிடை நீக்கம்

யோகேஷ் குமார்

‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என அறியப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரான வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2003-ல் சென்னையை கலக்கிய பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணியை என்கவுன்டர் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் வெள்ளதுரை. திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த வெள்ளதுரை, வீரப்பனின் என்கவுன்டரிலும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல 10-க்கும் மேற்பட்ட என்கவுன்டர் சம்பவங்களில் இவருடைய பங்கு இருந்ததால், தமிழக காவல் துறையினரால் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என வெள்ளதுரை அறியப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2013-ல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளராக வெள்ளதுரை பணியாற்றினார். அப்போது திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லையில் ராமு என்ற குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வெள்ளதுரையின் பங்கு இருந்ததாகத் தெரியவந்துள்ள நிலையில் அவர் பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.