பானை சின்னம் கேட்டு விசிக மேல்முறையீடு
பானை சின்னம் கேட்டு விசிக மேல்முறையீடு 
தமிழ்நாடு

பானை சின்னம் கேட்டு விசிக மேல்முறையீடு

யோகேஷ் குமார்

பானை சின்னம் கேட்டு விசிக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் தங்களுக்குப் பொது சின்னமாக பானை சின்னத்தை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது.

இதன் பிறகு “கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பொதுச் சின்னம் வழங்க முடியும். எனவே, விசிகவுக்கு பானை சின்னம் வழங்க இயலாது” என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இந்நிலையில், விசிகவுக்குப் பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் பானை சின்னம் கேட்டு விசிக சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் பெற்றள்ளதைக் குறிப்பிட்டு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி இன்று பிற்பகல் விசாரணை செய்வதாக அறிவித்துள்ளார்.