வைரமுத்து 
தமிழ்நாடு

இது அறிந்தே செய்யும் அநீதி: பட்ஜெட் குறித்து கவிஞர் வைரமுத்து

யோகேஷ் குமார்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் பீஹார், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் நலத்திட்டங்களுக்கும் வெள்ள நிவாரணத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் தமிழகத்துக்கென்று பிரத்யேகமாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இது அறிந்தே செய்யும் அநீதி என்று வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரமுத்துவின் எக்ஸ் பதிவு:

ஒன்றிய அரசின்

நிதிநிலை அறிக்கையில்

உரிமையும் நியாயமும்

தேவையும் உள்ள தமிழ்நாடு

போகிற போக்கில்

புறக்கணிக்கப்பட்டிருக்கிறது

இது

அறிந்தே செய்யும் அநீதி

தனக்கு எதிராகக்

குடைபிடித்தவனுக்கும்

சேர்த்தே பொழிவதுதான்

மழையின் மாண்பு

மழை

மாண்பு தவறிவிட்டது

நிதிநிலை அறிக்கையில்

குறள் ஒன்று கூறுவது

எழுதாத மரபு.

இவ்வாண்டு விடுபட்டுள்ளது

எழுத வேண்டிய குறள்

என்ன தெரியுமா?

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.