வைகோ (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

வைகோவுக்கு எலும்பு முறிவு!

கிழக்கு நியூஸ்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகனும், மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் காயம் குறித்து துரை வைகோ குறிப்பிட்டுள்ளதாவது:

"மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக வைகோ நேற்று திருநெல்வேலிக்கு வருகை தந்தார். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வைகோ உடல் நலம் பெறுவார். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

வைகோ விரைவில் முழுமையாகக் குணமடைந்து பொதுவாழ்வைத் தொடர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.