அதிமுகவுடன் மதிமுக கூட்டணியைத் தொடர முடியாதபடி ஜெயலலிதாவிடம் தவறான தகவல்களைச் சொன்னதன் பலனைத்தான் ஓ. பன்னீர்செல்வம் அனுபவித்து வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உரையாற்றியபோது வைகோ கூறியதாவது:-
“2011-ல் அதிமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தார்கள். அப்போது 12 சீட்தான் கொடுக்க முடியும் என்று கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று நான் கூறினேன். இதற்கு நான் உடன்பட முடியாது, எங்களுக்குக் கூடுதலாக சீட் வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர்கள், மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு இதைப்பற்றி ஜெயலலிதாவிடம் கூறுகிறோம். அதன்பின்னர் கூட்டணியை உறுதி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். குறிப்பாக ஓ. பன்னீர்செல்வம்தான் இப்படிக் கூறினார். ஆனால், ஜெயலலிதாவிடம் போய் கூட்டணியில் நீடிக்க வைகோ விரும்பவில்லை. அவர் கேட்கும் சீட்களை கொடுக்க முடியாது என்பதால் அவர் கூட்டணியை முறித்துக் கொள்கிறார் என்று பொய்யான தகவலைச் சொன்னார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால், மதிமுகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகளும் 1 நாடாளுமன்ற மாநிலங்களவை சீட்டும் கொடுப்பதாக ஏற்கெனவே அதிமுக முடிவு செய்து வைத்திருந்தது அதற்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. எங்கள் கூட்டணியை ஏற்படுத்துவதற்கு துக்ளக் சோவும் தினமணி வைத்தியநாதனும் கடுமையாக முயன்றார்கள். நானும் ஓ.பன்னீர்செல்வம் என்னை அழைத்துப் பேசுவார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் அழைக்கவேயில்லை. எங்கள் கூட்டணி நிலைப்பாடு பற்றி பொய் சொன்னதன் பலனைத்தான் அவர் இப்போது அனுபவித்து வருகிறார்” என்றார்.
Vaiko, the General Secretary of MDMK, has stated that O. Panneerselvam is currently reaping the consequences of providing false information to Jayalalithaa, which prevented the continuation of the MDMK's alliance with AIADMK on 2011.