திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 
தமிழ்நாடு

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | NDA | Piyush Goyal |

ஸ்டாலின் குடும்பத்தின் ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டின் பெருமை, கலாசாரம் மற்றும் மக்களைக் காப்பதற்கானப் போராட்டமே இது...

கிழக்கு நியூஸ்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும், ஸ்டாலின் குடும்பம் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் திருச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திருச்சிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

ரூ. 50,000 டாஸ்மாக் முறைகேடு

“வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஊழல் நிறைந்த ஸ்டாலின் அரசாங்கத்தை அகற்றப்போகிறது. உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் தங்களது முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஸ்டாலின் குடும்பத்தின் ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டின் பெருமை, கலாசாரம் மற்றும் மக்களைக் காப்பதற்கானப் போராட்டமே இது. டாஸ்மாக் முறைகேடு மூலம் அரசு கருவூலத்திலிருந்து ரூ. 50,000 கோடி அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இந்த அரசால் தமிழ்நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும், ஸ்டாலின் குடும்பம் அகற்றப்படும்.

திமுக கவலைப்பட வேண்டும்

எங்களது கூட்டணி மிகவும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் உள்ளது. திமுகதான் கவலைப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி திமுகவை மிரட்டுவது போல, எங்களை எந்தக் கட்சியும் மிரட்டவில்லை. தமிழ்நாட்டை அடுத்த அரசை தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் இப்போதே திமுகவிற்கு வந்துவிட்டது. ஸ்டாலின் குடும்பம் உட்கட்சிப் பூசல்களால் நிறைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தலைமையை திமுகவினரே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பத்தைப் போல இணைந்து செயல்படுகிறோம். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சொல்வதுதான் இறுதியானது.

தொகுதிப் பங்கீடு

தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள விவாதித்து வருகிறோம். அது இறுதி செய்யப்பட்டதும் செய்தியாளர்களிடம் தெரிவிப்போம். அது சுமூகமான முறையில் இறுதி செய்யப்படும். பிரதமர் மோடியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை வரவேற்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. தமிழ்நாடு மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறது. ஸ்டாலின் அரசாங்கத்தின் ஊழலுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான தலைமையையும் அவர்கள் விரும்புவதில்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலையைத் தமிழ்நாட்டில் காண முடிகிறது” என்றார்.

Union Minister Piyush Goyal said that a National Democratic Alliance government led by Edappadi Palaniswami will be formed and the Stalin family will be removed.