தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைகள் தோறும் மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விஜய், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் கடந்த வாரம் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தவெக தொண்டர்கள் மிக அதிக அளவில் கூடியதால், திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து அங்கு பிரசாரம் மேற்கொள்ளவே தாமதமானது. அரியலூரில் இரவு நேரத்தில் தான் பிரசாரம் மேற்கொள்ள முடிந்தது. எனவே, பெரம்பலூரில் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
அடுத்தக்கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார் விஜய். முதலில் நாகப்பட்டினம் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணியளவில் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலை 3 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாகப்பட்டின பிரசாரத்தில் பங்கெடுப்பதற்காக சென்னையிலிருந்து இன்று காலை புறப்பட்ட விஜய், தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து சிறிது தூரம் காரில் பயணித்த விஜய், பிறகு பிரசார வாகனத்தில் பயணம் செய்தார். பிரசார வாகனத்தின் மூலம் திருவாரூர் வழியாக நாகப்பட்டினத்தைச் சென்றடைந்தார் விஜய்.
பிரசாரத்தை மேற்கொள்ளும் அண்ணா சிலை சந்திப்பை நெருங்கியதும் பிரசார வாகனம் சற்று வேகம் குறைந்து பயணிக்கத் தொடங்கியது. வழிநெடுக்க ஆங்காங்கே தொண்டர்கள் மற்றும் மக்கள் விஜயைக் கையசைத்தபடி வரவேற்றார்கள்.
முன்னதாக, 14 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு இதே நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்னைக்காக குரல் கொடுத்தார் விஜய்.
TVK Vijay | Tamizhaga Vetrri Kazhagam | Vijay Nagapattinam | TVK Vijay Nagapattinam | Vijay |