கோப்புப்படம் படம்: https://x.com/TheRoute
தமிழ்நாடு

வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழப்பு: விஜய் இரங்கல்

"இனி வரும் காலங்களில் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்."

கிழக்கு நியூஸ்

சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேருடையக் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.