விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் | TVK Vijay |

சென்னை மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் வைத்துப் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தார்...

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சென்னையில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதையும் இச்சம்பவம் உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், மனம் முழுவதும் சோகத்துடன் இருப்பதாக உருக்கமாகப் பேசி வருத்தம் தெரிவித்தார்.மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அது பாதிக்கப்பட்டோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. பின்னர், அவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடி ஆறுதல் கூறினார். தொடர்ந்து பலமுறை விஜய் கரூர் செல்லத் திட்டமிட்டது தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து விஜய் இன்று சந்தித்தார்.

தனியார் பேருந்து மூலம் கரூரிலிருந்து பாதிக்கப்பட் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய், அவர்களது கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், சென்னைக்கு வரவழைத்ததற்கு மன்னிப்புக் கேட்ட அவர், விரைவில் கரூருக்கு வந்து சந்திப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து விஜய் தரப்பிலும் தவெக தரப்பிலும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

TVK Leader Vijay, met the families of those who lost their lives in the Karur Stampede in Chennai and offered his condolences.