தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டம் மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் விசாரித்தபோது, தவெக தலைவர் விஜய் மற்றும் தவெகவைக் கடுமையாகச் சாடினார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டன. நீதிபதி என். செந்தில்குமாரின் குடும்பப் பின்னணி குறித்து எழுதப்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக்கொண்ட நீதிபதி என். செந்தில்குமாரின் புகைப்படங்கள் கசியவிடப்பட்டன.
நீதிபதி செந்தில்குமாரும் மற்றொரு வழக்கு விசாரணையின்போது, இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். "நீதிபதிகளின் குடும்பப் பின்னணி மற்றும் கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் சமூக ஊடகங்களில் தோண்டி எடுக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றார் நீதிபதி செந்தில்குமார்.
இதனிடையே, கரூர் கூட்டநெரிசல் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கண்ணன், டேவிட், சசி என மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தார்கள்.
இவர்களுடைய வரிசையில் தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார், சாணார்பட்டி காவல் துறையினரால் கடந்த அக்டோபர் 12 அன்று கைது செய்யப்பட்டார். இவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி நிர்மல்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்மல்குமார் தனது பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் வழக்கு தொடுக்க, இதன் பெயரில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக, கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
Karur Stampede | TVK Vijay | Karur | Madras High Court | Madras High Court Judge | TVK District Secretary | Dindigul South TVK Secretary |