தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் நேற்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் அதிகளவில் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு அறிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜய், செய்தியாளர்களைச் சந்தித்து எதுவும் தெரிவிக்காதது விமர்சனத்துக்குள்ளானது. இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாக அறிக்கை மட்டும் வெளியானது. இதைத் தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்" என்று பதிவிட்டுள்ளார் விஜய்.
TVK Vijay | Stampede | Karur Stampede | Karur |