தமிழ்நாடு

சவுக்கு சங்கரைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி

கிழக்கு நியூஸ்

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

திருச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கில் முதல் குற்றவாளியாக சவுக்கு சங்கரும், இரண்டாவது குற்றவாளியாக நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலிருந்து திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்குவது தொடர்புடைய விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. காவல் துறை தரப்பில் 7 நாள்கள் கோரப்பட்ட நிலையில், ஒரு நாள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.