பொங்கலை முன்னிட்டு வெளியூருக்குச் சென்றவர்கள், இன்றும் (ஜன.18) நாளையும் சென்னைக்குத் திரும்பவிருப்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்துக் காவல்துறை.
போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் பரனூர் (செங்கல்பட்டு) சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும்.
சென்னை நோக்கி வரும் பிற வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயில-ஒரகடம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் செல்லவேண்டும்.
திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் திரும்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி, மதுரவாயல் நோக்கித் திருப்பி அனுப்பப்படும்.
பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று (ஜன.18) முதல் ஜன.20 பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒரு வழிப் போக்குவரத்தாக தேவை ஏற்ப மாற்றப்படும்.
ஜிஎஸ்டி சாலை, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் சாலை மற்றும் ஈசிஆர் சாலையில் கனரக வாகனங்களுக்கு இன்று (ஜன.18) பிற்பகல் 2 மணி முதல் ஜன.20 வரை அனுமதி இல்லை.
சிரமம் இன்றி மக்கள் சென்னைக்குத் திரும்ப ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.