தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு ரூ. 20,000 நிவாரணம்: அரசு அறிவிப்பு | TN Government |

தமிழ்நாடு முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்...

கிழக்கு நியூஸ்

கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையில் மழை பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

டிசம்பர் 3 காலை வரை இதேபோல விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தளவிற்கு நேற்று 15 செ.மீ மழை பெய்திருக்கிறது. பாரிமுனையில் அதிகமாக மழை பெய்துள்ளது. இன்று இரவு வரை மழை இருக்கும் என்றும், டிசம்பர் 3 காலை இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் சென்னையில் மழை பெய்யும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின், அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று (டிச. 1) மழையால் சேதமடைந்த பயிர்களுக்காக நிவாரணம் அறிவித்திருந்தார். ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20,000 நிவாரணத் தொகை அறிவித்ததோடு மட்டுமன்றி அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த மழையால் பாதிக்கப்பட்ட அந்த பயிர் சேத விவரங்களையும் உடனடியாக கணக்கிட உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழையால் தமிழ்நாடு முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 582 கால் நடைகள் பலியாகியுள்ளன. அவற்றுக்கான நிவாரணம் விரைவில் வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வு மைய கணிப்புக்குள் இந்த மழை வரவில்லை. சென்னையில் தோராயமாக 15 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் சாலைகளில் விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

Minister K.K.S.S.R. Ramachandran said Tamil Nadu government has announced that a compensation of Rs. 20,000 per hectare will be provided for agricultural lands damaged by waterlogging across Tamil Nadu due to heavy rains.