கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

"இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளன."

கிழக்கு நியூஸ்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் கே. பார்த்திபன் (32), கே. சாரதி (23), கே. முரளி (42) மற்றும் என். ராமதாஸ் (52) என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது:

"புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று (ஜூன் 18) கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளன.

எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.