பாஜகவைத் தாக்குவது போல் ஏதோ இருப்பதால்தான் ஜனநாயகனை மத்திய அரசு சான்றிதழ் தர மறுக்கிறது என்று திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசிப் படம் என்று கூறப்படும் ஜனநாயகன், கடந்த ஜனவரி 9 அன்று வெளியாகவிருந்தது. ஆனால், அதற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
பராசக்திக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்கிடையில் ஜனவரி 10 அன்று வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும், தணிக்கை வாரியத்தின் பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டு வெளியானது. ஆனால், பராசக்தி படம் காங்கிரஸை தாக்குவது போல் இருக்கிறது என்று குற்றம்சாட்டி அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில துணைத் தலைவர் அருண் பாஸ்கர் நேற்று (ஜன. 12) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பராசக்தி படத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர்களான இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ் போன்றோரின் உண்மையான படங்களைக் காட்டி உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியுள்ளார்கள் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாஜகவை தாக்குகிறதா ஜனநாயகன்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
“மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை வாரியம் பராசக்திக்குச் சான்றிதழ் கொடுத்தது. ஏனென்றால் அது காங்கிரஸை தாக்குவது போல் இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள். அதேபோல் ஜனநாயகன் ஒருவேளை பாஜகவைத் தாக்குவது போல் இருக்கிறதோ என்னவோ. அதனால்தான் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இது முற்றிலும் அரசியல்தான். நான் இரண்டு படங்களையும் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ஜனநாயகன் நிச்சயம் பாஜகவைத் தாக்குவதுபோல் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் அதை வெளியிட விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.
DMK MP T.K.S. Elangovan has said that the central government is refusing to grant Jana Nayagan2 a certificate because it seems to be attacking the BJP.