கோப்புப்படம் 
தமிழ்நாடு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உடல் சடலமாகக் கண்டெடுப்பு

கிழக்கு நியூஸ்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் பகுதி எரிந்த நிலையில், இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை அருகே கரைசுத்து புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான ஜெயக்குமார் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை என இவரது மகன் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜெயக்குமாரின் உடலானது அவரது தோட்டத்தில் பகுதி எரிந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயக்குமார் ஏற்கெனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் 30-ம் தேதி புகார் மனுவை அளித்திருந்தார். இதில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயக்குமாரின் மறைவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திருநெல்வேலி செல்கிறார்.