தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் 
தமிழ்நாடு

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் | Cyclone Alert |

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை இந்த ஆண்டு 5% அதிக மழைப் பதிவாகியுள்ளது....

கிழக்கு நியூஸ்

தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

“இந்தியக் கடல் பகுதியில் மூன்று சுழற்சிகள் நிலவுகிறது. முன்னதாக நேற்று (நவ. 23) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதேபோல நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி, இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகுதான் திசையைக் கணிக்க முடியும். அதற்கு முன்னதாக கணிக்க இயலாது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டில் அதிக மழை தருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை இந்த ஆண்டு 5% அதிக மழைப் பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் இயல்பை விடக் கூடுதலாக மழைப் பதிவாகியுள்ளது. ஆனால், சென்னையில் இயல்பான அளவை விடக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த சில நாள்களில் ஒரு சில மாவட்டங்களில் அதிகனமழையை எதிர்பார்க்கலாம். நவ. 24, 26-ல் சூறவாளிக்காற்று 35-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளது” என்றார்.

The low-pressure area over the southern Bay of Bengal is likely to intensify into a cyclone in the next 48 hours, said Meteorological Department Director Amudha.