தென்காசியில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு  
தமிழ்நாடு

தென்காசியில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு | Tenkasi |

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்ட முதலமைச்சர்...

கிழக்கு நியூஸ்

தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின. தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தார்கள். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Six people, including five women, died in a head-on collision between two private buses in Tenkasi. Chief Minister Stalin has expressed his condolences to the families of those who died in the accident.