காவலர் ஆறுமுக பாண்டியன் 
தமிழ்நாடு

நான் இலவசமாக பயணம் செய்யவில்லை: காவலர் ஆறுமுக பாண்டியன்

யோகேஷ் குமார்

அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யவில்லை என ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நாகர்கோயிலில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுக பாண்டியன் என்பவர் காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்தது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்தது.

இதன் பிறகு விசாரணைக்கு ஆஜரான ஆறுமுக பாண்டியனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியதாகத் தெரிகிறது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசுப் பேருந்தில் நான் இலவசமாக பயணம் செய்யவில்லை. பயணச்சீட்டு எடுத்துதான் பயணம் செய்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவறாக காணொளி வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.