கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளதாகவும், அவர்களை மீட்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு இன்று (நவ.12) கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் பின்வருமாறு,
`2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9-ல் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (நவ.12) ஒரு மீன்பிடிப் படகில் சென்ற நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்’ என்றார்.